தமிழகத்தில் நோய் தடுப்பு விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை தியாகராய நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கி வைத்தார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
பெரும்பாலான நோய்கள், அவற்றின் ஆரம்ப அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததினால் தான் உருவாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் 16,566 பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 50.76 லட்சம் மாணவர்களுக்கு, தேசிய சிறார் நல திட்டத்தின் கீழ், மூன்றுமாதத்திற்கு ஒருமுறை மருத்துவ நிபுணர்கள் வழிகாட்டும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த மாணவர்கள் சுகாதார தூதர்களாக செயல்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆரம்ப கட்டத்தில் நோய்கள் கண்டறியப்படும் முக்கியத்துவத்தை தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் விளக்குவார்கள். இதன் மூலம், ஒரு கோடி குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
மேலும், “வளர்இளம் பருவத்தினர் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை திறன்” திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இது, மாணவர்களுக்கு மனஅழுத்தம் உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வை மருத்துவ மற்றும் ஆலோசனை குழுக்களின் உதவியுடன் ஏற்படுத்தும்.
இதனுடன், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய மூன்று புதிய நடமாடும் மருத்துவ குழுக்களையும் அவர் அறிமுகம் செய்தார்.
நிகழ்வில், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, தியாகராய நகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி, சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு இயக்குநர் அருண் தம்புராஜ், பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், துணை இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.