கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை இடமாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு

0

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை இடமாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்த் திரையுலகின் திலகம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் சிலை, சென்னை ஜி.என். செட்டி சாலையிலிருந்து, வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்க வளாகத்திற்குள் மாற்றப்படவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான கோரிக்கையை அவரது குடும்பத்தினர் முன்வைத்ததாகவும், அதனை அரசு ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விளக்கக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

1908 ஆம் ஆண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒழுகினசேரியில் சுடலைமுத்துப்பிள்ளை மற்றும் இசக்கி அம்மாள் தம்பதியருக்கு பிறந்தவர் என்.எஸ். கிருஷ்ணன். அவரது முழுப்பெயர் “நாகர்கோவில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன்”, எனவே அதன் சுருக்கமே என்.எஸ். கிருஷ்ணன் ஆகும்.

புகழ்பெற்ற நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளின் உருவாக விளங்கியவர். தனது திரைப்படங்களில் சமூக விழிப்புணர்வையும் அறிவியல் கருத்துகளையும் வலியுறுத்தியவர். 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மகாத்மா காந்தியின் சிந்தனைகளில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வாழ்ந்த இவர், ஏராளமானோருக்கு உதவிக்கரம் நீட்டிய நற்குணமிக்க நபராக இருந்தார்.

அவர் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதியன்று 49வது வயதில் மரணமடைந்தார்.

1969ஆம் ஆண்டு, அப்போது முதல்வராக இருந்த திரு அண்ணா, சென்னை ஜி.என். செட்டி சாலை மற்றும் திருமலை பிள்ளை சாலை சந்திப்பில் என்.எஸ். கிருஷ்ணனின் சிலையை திறந்து வைத்தார். பின்னர், 2008இல் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டபோது, சிலை தற்காலிகமாக மாற்றப்பட்டது.

தற்போது, அவர் குடும்பத்தினர், சிலையை கலைவாணர் அரங்க வளாகத்திற்குள் மாற்றும்படி கோரியுள்ளனர். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, சிலையை தற்போதுள்ள இடத்திலிருந்து பாதுகாப்புடன் அகற்றி, விரைவில் வாலாஜா சாலையில் உள்ள தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here