மாணவர்களின் நலனுக்காக ரூ.2,152 கோடி கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பின் கோரிக்கை

0

மாணவர்களின் நலனுக்காக ரூ.2,152 கோடி கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பின் கோரிக்கை

மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாட்டுக்கான ரூ.2,152 கோடி கல்வி பங்களிப்பு நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா. ஜனார்த்தனன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய அளவில் 15 லட்சம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம், தலைவர் கே.சி. ஹரி கிருஷ்ணன் தலைமையில் ஜூன் 25, 26 (புதன், வியாழன்) தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அரியானா, ஒடிஷா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 26 அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன:

  • தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
  • பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திடாத காரணமாக நிலுவையில் உள்ள ரூ.2,152 கோடி நிதியை மாணவர் நலனுக்காக உடனடியாக விடுவிக்க வேண்டும்.
  • இந்தியா முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மேலும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
  • தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் ஒப்பந்த ஊதியம் போன்ற முறைகளை கைவிட்டு, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நிலையான ஊதியத்தை வழங்க வேண்டும்.
  • மாணவர்களின் நலனுக்கு புறம்பாக இருப்பதால், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும்.

இதுபோன்ற 8 முக்கிய தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here