“புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காகவே நான் திருநீறை பூசியதில்லை; அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அதை நீக்கியதுமில்லை” – திருமாவளவன் விளக்கம்
விசிக (விடுதலை சிறுத்தைகள் கட்சி) தலைவர் திருமாவளவன், சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அவரது திருநீறு நீக்கும் செயலைப் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:
“நான் கோயிலுக்குச் சென்ற போது, என் தலையில் தொப்பி வைக்கப்பட்டது. அதை உடனடியாக எடுத்துவிட முடியாது; ஆனால், ஒரு நிமிடத்தில் எடுத்துவிடலாம். அதைப் பொருத்தவரை, அதை வைக்கும் நபர்களுக்கும் நாம் அதை எடுப்போம் என்பது புரிந்திருக்கும். இது ஓர் அடையாளம்.
அதேபோல, பூசாரி என் நெற்றியில் திருநீறு பூசினார். அவரது உணர்வை மதித்து, நன்றி தெரிவித்தேன். ஆனால், அதை நீண்ட நேரம் வைத்திருக்க இயலாது. புண்ணியம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் அதை பூசியதில்லை. அவமதிக்க வேண்டும் என்பதற்காக அழித்தும் வைக்கவில்லை,” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறினார்:
“என்னை நம்பும், நேசிக்கும் பலரும் இன்னும் கோயில்களுக்கு அழைக்கிறார்கள்; நான் செல்கிறேன். கலசத்தில் தண்ணீர் ஊற்றச் சொல்கிறார்கள்; ஊற்றுகிறேன். என் தாய் என்னை வரவேற்கும்போது ஆரத்தி எடுத்து திருநீறு பூசுகிறார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். என் தாய்க்கு அளிக்கும் மரியாதையை என் மக்களுக்கும் அளிக்கிறேன். இது என் மக்களிடம் உள்ள அன்பும் மரியாதையும் காட்டும் ஒரு வெளிப்பாடு.”
இந்த விவாதம், திருமாவளவன் சமீபத்தில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்றபோது ஏற்பட்டது. அங்கு நெற்றியில் பூசப்பட்ட திருநீறை, சிலர் அவரிடம் செல்ஃபி எடுக்க விரும்பியபோது அவர் துடைத்துவிட்டு புகைப்படம் எடுத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து அவருக்கு சிலரால் விமர்சனங்களும் வந்தன.