தமிழக அரசு நிதிநெருக்கடியில் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி!

0

தமிழக அரசு நிதிநெருக்கடியில் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி!

ஓய்வுபெற்றோர் உள்ளிட்டோருக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், “தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது போல் தெரிகிறது” என உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சமையல் எண்ணெய் வழங்குவதற்காக சமீபத்தில் டெண்டர் அழைக்கப்பட்டது. இதில், கேடிவி ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது மற்றும் எண்ணெய் விநியோகம் செய்தது. இதற்கான தொகையான ரூ.141.22 கோடியை அரசு செலுத்த வேண்டும் என்றும், டெண்டர் விதிகளின்படி 30 நாட்களுக்குள் பணம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்த அந்த நிறுவனம், நிலுவைத் தொகையை பெற்றுத் தர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிறுவன தரப்பினர், “நிலுவை தொகை செலுத்தப்படவில்லை என்றாலும், எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வழங்க வேண்டிய தொகை ரூ.200 கோடிக்கு மேல் உள்ளது. எனினும், அரசு புதிய டெண்டர் கேட்டு செயல்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “கடந்த இரண்டு வாரங்களில் ஓய்வுக்கால பணப்பலன்கள் வழங்கப்படவில்லை, அரசு செலுத்த வேண்டிய பணம் கிடைக்கவில்லை என பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழக அரசு பணப் பலன்கள் வழங்கும் விஷயத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறான சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, நிதிநிலை நெருக்கடியில் உள்ளதா? என்பது கேள்வியாகிறது. இதுவே அரசின் நிர்வாக முறைதான் எனில், அது ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கடுமையாக விமர்சித்தார்.

அடுத்து, மனுதாரர் நிறுவனத்துக்கு நிலுவை தொகை வழங்குவது குறித்த அரசின் நிலைப்பாட்டை கேட்டுத் தெரிவிக்கும்படி அரசுத் தரப்பின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here