வீரப்பனை பிடிக்க சென்ற அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடி தாக்குதல் – பல குடும்பங்கள் இன்னும் வறுமையுடன் பிழைப்பில் போராடுகின்றன
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி, சந்தனக் கடத்தல் வழக்கில் குற்றவாளியாக இருந்த வீரப்பனை பிடிக்க அதிரடிப்படையினருடன் எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு மேட்டூரை அடுத்த பாலாறு வனப்பகுதிக்குச் சென்றது. அவர்களுக்கு வழிகாட்ட, மேட்டூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 16 பேர், உதவியாளர் கிளமென்ஸ் உட்பட அழைக்கப்பட்டனர்.
பாலாறு அருகே உள்ள சுரைக்காய் மடுவில், வீரப்பன் அமைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் அதிரடிப்படை சென்ற வான் சிதறியது. இதில் 7 போலீசாரும், 15 கிராமவாசிகளும் உடல் சிதறி உயிரிழந்தனர். எஸ்பி. கோபாலகிருஷ்ணன், கிளமென்ஸ், கோவிந்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இருசார் ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
தொடர்ந்து, உயிரிழந்த கிராமவாசிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்த இருசார் மற்றும் கிளமென்ஸுக்கு தலா ரூ.25,000-வும் வழங்கப்பட்டது.
வனப்பகுதிக்குள் செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டோம்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்ததாவது:
“நாங்கள் ஆடு மேய்ப்பதும் கூலி வேலை செய்வதும்தான் வாழ்க்கை. வனப்பகுதிக்குள் வழிகாட்டி எனப் போலீசார் எங்கள் வீட்டிலுள்ள ஆண்களை மிரட்டி அழைத்துச் சென்றனர். எங்கள் ஆண்கள் சிதைந்த உடலுடன் வீடு திரும்ப, அந்த வேதனையைச் சொல்ல முடியாது. குழந்தைகளுடன், கர்ப்பமாகவும் இருந்த சில பெண்கள், இளம் வயதிலேயே கணவரை இழந்து வேதனையில் தள்ளப்பட்டனர். இன்றும் வறுமையில் தவித்து வருகின்றோம்.”
அரசு உதவி ஏன் மறுக்கப்பட்டது?
“போலீசாரின் குடும்பங்களுக்கு அரசு பல உதவிகளை வழங்கியது. ஆனால், வழிகாட்டச் சென்ற எங்கள் ஆட்களுக்கு எந்த தீர்வும் இல்லை. எங்களது பிள்ளைகள் படித்து உயர வேண்டும். அதை தமிழக அரசு கருணையுடன் புரிந்து, நியாயமான உதவிகளை செய்ய வேண்டும்” எனக் கூறினர்.
உயிர் தப்பியவர்கள் நினைவுகள்
76 வயதான இருசார் கூறும்போது, “அதிரடிப்படையுடன் சென்ற போது கண்ணிவெடி வெடிக்க, பலத்த காயத்துடன் உயிர் தப்பினேன். சிகிச்சைக்கு ரூ.25 ஆயிரம் மட்டுமே கொடுத்தனர். தற்போது வயது முதிர்ந்து, உடல் நலமின்றி ஆடு மேய்த்து வாழ்க்கை நடத்துகிறேன்” என்றார்.
அதேபோல், கிளமென்ஸ் கூறும்போது, “அதிரடிப்படையில் பணியாற்றியதற்காக கிடைத்தது காயங்களும், ரூ.25 ஆயிரமும் தான். தற்போது 75 வயதில் கூலி வேலை செய்து வாழ்கிறேன். என் மகள் நான்சி அர்ச்சனா எம்.எஸ்.சி வேதியியல் படிக்கிறாள். அரசுப் பணி கிடைத்தால் எங்கள் குடும்பம் வறுமையில் இருந்து மீண்டும் எழும்” என்றார்.