மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த விதிமீறல்களை ஒட்டி நடவடிக்கை எடுப்பது குறித்து நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காவல் துறையினர் தற்போது சம்பந்தப்பட்ட தகவல்களை திரட்டிக் கொண்டுள்ளனர்.

மதுரையில் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்விற்காக, மாநகர காவல் துறை முன்வைத்த 52 விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில், அரசியல் பேசக்கூடாது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் போன்ற முக்கியமான நிபந்தனைகள் இருந்தன.

மாநாட்டில் பங்கேற்கும் வாகனங்கள் தனித்தனி உட்கோட்ட காவல் அதிகாரிகளிடம் அனுமதி பாஸ் பெற வேண்டும்; மாநாட்டு இடத்தில் ட்ரோன் பயன்படுத்த கூடாது; மாநாடு நடைபெறும் இடத்திற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்; முருகனின் அறுபடை வீடுகள் மாதிரியை அமைப்பதற்கான அனுமதி அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்ட 6 நிபந்தனைகளில், வாகன பாஸ் தவிர்ந்த மற்ற நிபந்தனைகளை மாற்றி அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 5 நிபந்தனைகளுக்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மாநாட்டில் சிலர் அரசியல் பேசினர், மற்ற மதங்களை ஒப்பிட்டு கருத்து தெரிவித்தனர் எனக் கூறி, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாநாட்டில் நீதிமன்ற உத்தரவு மற்றும் காவல் துறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆராய மாநகர காவல் துறை நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

விதிமீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். காவல் ஆய்வாளர்கள் மற்றும் நுண்ணறிவு பிரிவினர் மாநாடு நடந்த பகுதிகள், தலைவர்களின் உரைகள் மற்றும் சாலைகளில் நடந்த சம்பவங்களைப் பதிவு செய்த வீடியோ, புகைப்படங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

விதிமீறல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், அரசு சட்ட ஆலோசகர்களின் கருத்தை பெற்று, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது:

“மாநாட்டை ஒட்டி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய நிபந்தனைகள் வகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது, அந்த நிபந்தனைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் மீறப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்து, அறிக்கை டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பப்படும். பின்னர் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Facebook Comments Box