முழுமையான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், 141 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றிருக்கும் 460-க்கும் அதிகமான தனியார் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகள் ஒவ்வொரு கல்வியாண்டும் தங்களது இணைப்பு அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் (AICTE) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் புதுப்பித்துக் கொள்ளும் கட்டாயம் உள்ளது.

இந்நிலையில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இணைப்பு அனுமதியைப் பெறும் நோக்கத்தில் பல கல்லூரிகள் விண்ணப்பித்திருந்தன. அந்தவகையில், அவர்களது கட்டிடவசதி, உள்கட்டமைப்பு, தேவையான ஆவணங்கள் மற்றும் பயிற்சி வசதிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வுகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளனவென்று கண்டறியப்பட்ட 141 கல்லூரிகளுக்கு, விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என்ற அடிப்படையில் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர் நிலை அதிகாரிகள் சிலர் கூறுகையில், “அந்த 141 கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் பேராசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடு, நூலக வசதிகள் மற்றும் ஆய்வக அமைப்புகளில் சீர்கேடு உள்ளது. இதனால் அவை நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை. இக்கல்லூரிகள் 45 நாட்கள் அவகாசத்தில் குறைகளைச் சரிசெய்ய வேண்டும். அதன் பிறகு நேரில் ஆய்வு செய்து மட்டுமே அவர்களின் இணைப்பு அங்கீகார நிலை குறித்து முடிவு செய்யப்படும்,” என தெரிவித்தனர்.

இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்க உள்ள சூழலில், இந்நடவடிக்கைகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

ஏனெனில், மாணவர்கள் ஒரு கல்லூரியில் சேர்க்கை பெற்ற பிறகு, அக்கல்லூரிக்கு அங்கீகாரம் நீக்கப்பட்டால், அவர்கள் எதிர்கால கல்வி பயணமே பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனாலேயே, விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள கல்லூரிகள் குறித்த முழு பட்டியலையும் பொதுமக்கள் நலனுக்காக வெளிப்படையாக வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Facebook Comments Box