மாற்று இடங்களில் வீடுகள் ஒதுக்கக் கோரி: மெரினாவில் திருநங்கைகள் திடீர் சாலை மறியல்

மாற்று இடங்களில் தங்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மெரினா காமராஜர் சாலையில் திருநங்கைகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழக அரசு சார்பில் சென்னை கண்ணகி நகரில் திருநங்கைகள் குடியிருப்பதற்காக வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த குடியிருப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். எனினும், அந்த இடத்தில் அடிக்கடி குற்றச்செயல்கள் நடைபெறுவதாகவும், குடியிருப்புகள் தேவையான அடிப்படை வசதிகளற்றதாகவும் திருநங்கைகள் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பிற பகுதிகளில் வீடுகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருநங்கைகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அந்த நேரத்தில் அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்பதையடுத்து, சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் காமராஜர் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மெரினா உழைப்பாளர் சிலை முதல் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மிகவும் நெரிசலாக காட்சியளித்தது.

சம்பவ இடத்திற்கு மயிலாப்பூர் உதவி காவல் ஆணையர் சீனிவாசன் விரைந்து வந்து, திருநங்கைகளுடன் பேசிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், திருநங்கைகள் சாலை மறியலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Facebook Comments Box