புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.129 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளது: முதல்வர் ரங்கசாமி தகவல்

மத்திய அரசு புதுச்சேரிக்கு ரூ.129 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளது. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலம் ரூ.4,750 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது அரசு பொறுப்பேற்ற பின், புதுச்சேரி வளர்ச்சிக்காக அதிக அக்கறை காட்டி வருகிறது. குறிப்பாக, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முக்கியத்துவம் வழங்கி செயல்படுகிறது.

தேவையான நிதி, சொந்த வருவாய் மற்றும் மத்திய அரசின் உதவி ஆகியவற்றின் மூலம், பல்வேறு நிலைகளில் பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு, மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூ.200 கோடி வழங்க அனுமதி அளித்துள்ளது.

அதில் ரூ.129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் புதுச்சேரி முழுவதும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆன்மிக சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்புகளை மேம்படுத்தல், விரிவான சுற்றுலா ஆய்வை வலுப்படுத்தல், பேருந்து நிறுத்துமிடங்கள் அமைத்தல் உள்ளிட்ட 14 பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள நிதி பெறுவதற்கான திட்டங்கள் விரைவில் அனுப்பப்படும்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலம் ரூ.4,750 கோடி கடனுதவி கிடைத்துள்ளது. இது இரண்டு தவணைகளில் வழங்கப்படும். இந்தக் கடனை 50 ஆண்டுகள் கழித்து திருப்பிச் செலுத்த வேண்டும். வட்டி விகிதம் மிகக் குறைவு. வரும் 5 ஆண்டுகளில் இந்த நிதி மூலம் பணிகள் நிறைவேற்றப்படும். இதில், குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,030 கோடி, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி, பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு ரூ.200 கோடி, சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டிற்கு ரூ.1,170 கோடி உள்ளிட்டவை அடங்கும்.

இந்தக் கடன் பெறும்போது மக்களிடம் இருந்து எந்த புதிய வரியும் வசூலிக்கப்படாது. பிஆர்டிசி ஊழியர்கள் ரூ.10 ஆயிரம் ஊதிய உயர்வை கோரிய நிலையில், அது வழங்கப்பட்டுள்ளது. பயணப்படி 25% உயர்வை கோரிய நிலையில், முதல்கட்டமாக உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, பணியில் திரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சார பேருந்துகள் இயக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப கட்டமாக 25 பேருந்துகள் ஓரிரு மாதங்களில் வரும். பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரிய நிலையில், முதல்கட்டமாக ஊதிய உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற இயலுமா என்பதை நிதிநிலைக்கு ஏற்ப தீர்மானிப்போம் என்றார்.

செய்தியாளர்கள், பொதுப்பணித்துறையில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பியபோது, கடந்த 5 ஆண்டுகளில் எதையும் செய்ய முடியாத ஆட்சி இருந்தவர்கள், தற்போது நடைபெறும் வளர்ச்சி பணிகளை விமர்சிக்க மட்டுமே பேசுகிறார்கள் என்றார். யாரும் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நாங்கள் 5,000 பணியிடங்களை நிரப்பியுள்ளோம். இதனால், எதிர்க்கட்சிகள் குறைசொல்வது வழக்கமானதே என அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு பல உதவிகள் செய்தாலும், மாநில அந்தஸ்து வழங்கவில்லை என்ற கேள்விக்கு, மாநில அந்தஸ்து என்பது எங்கள் உரிமை. அதை எப்போதும் வலியுறுத்துவோம். தேவைப்பட்டால் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றார்.

பிரதமர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். கூட்டணி கட்சி தலைவராகச் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, இருக்கலாம் என்று பதிலளித்தார். அமைச்சர் ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்கீடு குறித்து, எப்போது வேண்டுமானாலும் ஒதுக்கப்படும் என்றார்.

வரும் மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் மழைநீர் வடிவதற்கு நாட்கள் ஆனது. ஆனால் தற்போது 2 மணி நேரத்திலேயே மழைநீர் வடிந்துவிடுகிறது. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.

Facebook Comments Box