தொழிலாளர் நலத்தில் தமிழகம் முன்னிலை: உதயநிதி ஸ்டாலின் பெருமை

தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 100 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, அமைப்பில்லா பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு ஆட்டோக்களை வழங்கினார்.

நிகழ்வில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: தற்போது தொழிலாளர் நலத்துறையின் கீழ் 20 அமைப்பில்லா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்படுகின்றன. ஆண்களுக்கு இணையாக பெண்களும் முன்னேற வேண்டும் என்ற நோக்கில், முதல்வர் ஸ்டாலின் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் விடியல் பயணம் திட்டம், புதுமை பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், தொழிலாளர் நலத்துறை ஆண்டுதோறும் ஆட்டோக்களை வழங்கி வருகிறது. 2023-ஆம் ஆண்டு 500 ஆட்டோக்களும், 2024-ஆம் ஆண்டு 1,000 ஆட்டோக்களும் வழங்கப்பட்டன. இவ்வாண்டு முதல் கட்டமாக 100 பெண்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 1,000 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கப்படும். தற்போது இந்தியாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளை ஆட்டோ ஓட்டுநர்களாக பயிற்சி அளித்து, நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்து, மானியத்துடன் ஆட்டோ வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். இதனால் தொழிலாளர் நலனை காப்பதில் நாடு முழுவதும் முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது என அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் உரையாற்றுகையில், “தமிழகம் முழுவதும் இதுவரை 329 இடங்களில் மெகா வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் 2.70 லட்சம் இளைஞர்கள் வேலை பெற்றுள்ளனர். தொழிலாளர் நல வாரியத்தில் 49 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில், வாரியத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ. 2,832 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலர் கொ. வீரராகவராவ், ஆணையர் ராமன், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box