தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 – ஆதரவு மற்றும் எதிர்ப்பு : ஒரு சுருக்கமான பார்வை
பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025–ஐ முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில், பல்வேறு தரப்பினரிடையே ஆதரவும் எதிர்ப்பும் பெற்ற முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை கடந்த 2020-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு, மாநிலத்துக்கென தனிப்பட்ட கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவித்தது. இதற்காக, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இந்தக் குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு, கல்விக் கொள்கைக்கான 520 பக்க வரைவுத் திட்டத்தை 2023 அக்டோபரில் தயாரித்தது. அதை தமிழ்நாடு அரசுக்கு 2024 ஜூலை 1-ஆம் தேதி சமர்ப்பித்தனர். அதன் ஓராண்டுக்குப் பிறகு, தற்போது பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்ப மொழியாக எந்த ஒரு இந்திய மொழியும் இடம்பெறும் மும்மொழிக் கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு கல்விக் கொள்கையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவை மட்டுமே உள்ள இருமொழிக் கொள்கை இடம் பெற்றுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை, கல்வி பொதுப் பட்டியலில் தொடர வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும், 3, 5, 8, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை பரிந்துரைக்கும் தேசிய கல்விக் கொள்கை, 3, 5, 8-ஆம் வகுப்புகளில் தோல்வியடைந்தால் மறுதேர்வு கட்டாயம் என குறிப்பிடுகிறது.
ஆனால், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை, மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு, பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்து செய்கிறது. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிடுகிறது. கல்வியாளர்கள் கருத்துப்படி, 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை, பள்ளிவிடுப்பு விகிதத்தை பெரிதும் குறைக்கும்.
அதேவேளை, 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை என்றாலும், “பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்பு மாணவர்கள் வயதுக்கேற்ப வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களை அடைவதை உறுதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், மாணவர்களின் திறன்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க, 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு இடைவெளிகளில் மாநில அளவிலான ‘SLAS’ எனும் கற்றல் அடைவு தேர்வு நடத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகங்களில் மாற்றம் செய்யப்படும். முதல் தலைமுறை மாணவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண் குழந்தைகள் பள்ளியில் தொடரவும், அவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடக்கத்திலிருந்து மேல்நிலைக் கல்வி வரை வாரத்திற்கு குறைந்தது இரண்டு உடற்கல்வி நேரங்கள் கட்டாயமாக்கப்படும். மேலும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ், வட்டார அளவில் சிறந்த 500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதிரி பள்ளிகளாக உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
“மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக் கண்டு அஞ்சியதால், அவசரமாக தேசிய கல்விக் கொள்கையை நகலெடுத்து மாநிலக் கல்விக் கொள்கையாக திமுக அரசு வெளியிட்டுள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
அதேபோல, “தனியார் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கைப்படி மூன்றாவது மொழி இடம்பெறுவதற்கு திமுக அரசு சம்மதிக்கிறதா? அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?” என தமிழக பாஜக மூத்த தலைவர் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், விசிக பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் எம்.பி., “மாநிலக் கல்விக் கொள்கையில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வை ரத்து செய்தது தவறு. இது உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி தரத்தை பாதிக்கும். முதல்வர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், தொடர்ந்து 10, பிளஸ் 1, பிளஸ் 2 என மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வு எழுதுவதால் மாணவர்கள் மன அழுத்தம் அனுபவிக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு, பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது என பல கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆதரவும் எதிர்ப்பும் ஒருபுறமிருக்க, கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவில் இருந்த சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளார். “தமிழக அரசுக்கு நாங்கள் அளித்த அறிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவில் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. நாங்கள் பரிந்துரைக்காத பல அம்சங்கள் இதில் உள்ளன. விரிவான தொலைநோக்கு திட்டங்கள் இல்லாமல், தமிழக அரசின் தற்போதைய திட்டங்களையே கொண்டிருக்கிறது. உயர் கல்வியை தவிர்த்து, பள்ளிக் கல்விக்காக மட்டுமே கொள்கை வெளியிட்டதற்கான காரணம் புரியவில்லை. மேலும், எங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை; வெளியீட்டு விழாவிற்கே எங்களை அழைக்கவில்லை” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.