தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஆதரவாக இருந்தும், அவர்களுக்கு எதிராக செயல்படுவதாக போலியான பிம்பம் உருவாக்கப்படுகிறது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தனியார்மயமாக்கலை எதிர்த்து, பணி நிரந்தரம் கோரி தூய்மை பணியாளர்கள் 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கிறது என்று வழக்கறிஞர் வினோத் நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தார். அதற்கு தலைமை நீதிபதி, மனு தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இன்று மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக வினோத் முறையிட்டபோது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதைப் போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது; உண்மையில் அரசு அவர்களுக்கு ஆதரவாக உள்ளது” என வாதிட்டார்.

மனுவில் குறைபாடுகள் உள்ளதாக பதிவுத் துறை தெரிவித்ததை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா, அவற்றை திருத்தி தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், தினந்தோறும் முறையீடு செய்தால் மனு ஏற்கப்படாது என்றும் எச்சரித்தார்.

பின்னணி: சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்கான ரூ. 276 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், இந்தத் தீர்மானத்தை ரத்து செய்து, வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.

Facebook Comments Box