மாமல்லபுரத்தில் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதம்: ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்
மாமல்லபுரத்தில் அன்புமணி நடத்திய பாமக பொதுக்குழுக் கூட்டம் சட்டவிரோதம் எனக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸ் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னையில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், அன்புமணி கட்சித் தலைவராக மேலும் ஓராண்டு தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமதாஸ் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை அவரது தனிச் செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ளார்.
அதில், “2024 மே 30 முதல் நான் கட்சித் தலைவராக உள்ளேன். அன்புமணி செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் எந்த அங்கீகாரமும் இல்லாமல் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னணித் தலைவர்களை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். செயல் தலைவர் என்ற பதவியை ஏற்காமல், போட்டியாக செயல்படுகிறார். இதனால், ஒழுங்கு நடவடிக்கை குழு மூலமாக அவரை சஸ்பெண்ட் செய்வது அல்லது நீக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புமணியின் சுயலாப நோக்கத்திற்கான நடவடிக்கைகளை கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. நிறுவனரின் அனுமதி பெறாமல், அழைப்பு விடுக்காமல், கட்சியின் விதிகளை மீறி பொதுக்குழுவை கூட்டியுள்ளார். மேலும், தலைவர் பதவியில் ஓராண்டு நீட்டிப்பு பெற்றதாக தானாகவே அறிவித்துள்ளார்.
பாமக தலைவரான என்னுடைய அனுமதி இல்லாமல் எந்தக் கூட்டத்தையும் நடத்த அவருக்கு உரிமை இல்லை. அவர் சாதாரண செயல் தலைவர்தான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.