அரசியல் கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி அலுவலகங்களில் நடைபெற்ற விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள அதன் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கட்சியின் செங்கொடியை மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.

தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்று நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், நடிகை குஷ்பு, மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமாகா சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் பங்கேற்று கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் துணைத்தலைவர் ஏ. ஜி. மவுரியா பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

தேமுதிக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொருளாளர் எல். கே. சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் என். ஆர். தனபாலன் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

Facebook Comments Box