அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையால் தமிழக உற்பத்தி துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையை சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா – அமெரிக்கா இடையே, இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன். தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். அதேநேரம், அமெரிக்காவின் 25 சதவீத வரிவிதிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக 50 சதவீதமாக வரி அதிகரிப்பு காரணமாக கடும் தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தமிழகத்தில் தாக்கம் அதிகம்: கடந்த நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியான 433.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களில் 20 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் 52.1 பில்லியன் டாலர் பொருட்களில் 31 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இவ்வாறு அமெரிக்க சந்தையை தமிழகம் அதிகமாக சார்ந்துள்ளதால், இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் இந்த இறக்குமதி வரியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இது தமிழக உற்பத்தி துறை, வேலைவாய்ப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த வரிவிதிப்பால், ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள் – ரத்தினக் கற்கள், தோல், காலணிகள், கடல் பொருட்கள், ரசாயனம் ஆகிய துறைகளில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துறைகள் அனைத்தும் அதிக தொழிலாளர்களை சார்ந்தவை என்பதால் கவலைக்குரியது. இதில் எந்த ஒரு ஏற்றுமதி மந்த நிலையும் விரைவாக பெருமளவிலான பணி இழப்புகளுக்கு வழிவகுக்கும். கடந்த 2024-25-ம் ஆண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் 28 சதவீதம் அளவுக்கு பங்களித்தது. இது நாட்டின் மற்ற மாநிலங்களைவிட அதிகம்.

வேலை இழக்கும் அபாயம்: குறிப்பாக, தமிழகத்தில் ஜவுளித் துறை 75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. தற்போது 25 சதவீத வரி மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 50 சதவீத வரியின் காரணமாக, 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இந்த நெருக்கடியை தணிக்க, நமது ஏற்றுமதி போட்டித் தன்மைக்கு நீண்டகால தடையாக உள்ள கட்டமைப்பு சிக்கல்களை தீர்ப்பது அவசியம். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த தொழில் அமைப்புகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினேன். அதன் அடிப்படையில், ஜவுளித் துறைக்கு இரண்டு அம்சங்களில், மனிதனால் உருவாக்கப்பட்ட இழை மதிப்பு சங்கிலிக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தலைகீழ் வரி கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும். முழு சங்கிலியையும் 5 சதவீத ஜிஎஸ்டி அடுக்குக்குள் கொண்டு வருவது மற்றும் அனைத்து வகையான பருத்திக்கும் இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிப்பது ஆகியவற்றில் துரித நடவடிக்கை தேவைப்படுகிறது.

மேலும், அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின்கீழ் (ECLGS) 30 சதவீதம் பிணையில்லா கடன்களை 5 சதவீத வட்டி மானியம் மற்றும் அசலை திருப்பிச் செலுத்துவதில் 2 ஆண்டு தற்காலிக தடையுடன் நீட்டித்தல், ஏற்றுமதி பொருட்கள் மீதான தீர்வைகள், வரிகளை நீக்குதல் (RoDTEP) திட்டத்தின் பயன்களை 5 சதவீதமாக உயர்த்துதல், நூல் உட்பட அனைத்து ஜவுளிப் பொருள் ஏற்றுமதிக்கும் முன் மற்றும் பின்கடனை நீட்டித்தல் ஆகியவை நமது ஏற்றுமதி போட்டித் தன்மையை வலுப்படுத்துவதற்கான பிற முக்கிய காரணிகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய வர்த்தகத்தில் சுங்கவரி தாக்கங்கள், போட்டி அழுத்தங்கள் காரணமாக, மற்ற துறைகளும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. அதற்கு உடனடி நிவாரணம் வழங்கி, பணப் புழக்கத்தை மேம்படுத்தவும், செலவுச் சுமைகளை குறைக்கவும் சுங்க வரிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்பு வட்டி மானியத் திட்டம் அறிமுகம் செய்ய வேண்டும், அதிக சுங்க வரி சந்தை அபாயங்களை ஈடுகட்ட, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இந்த பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, கரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டதுபோல, அசலை திருப்பிச் செலுத்துவதில் சலுகை உள்ளிட்ட சிறப்பு நிதி நிவாரணத்துடன் நமது ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க வேண்டும். பிரேசில் அரசு அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வரி தள்ளிவைப்பு மற்றும் வரிச் சலுகைகளை அறிவித்துள்ளது. இதுபோன்ற முயற்சியை இந்தியாவிலும் எதிர்பார்க்கிறோம். இதுவரை காணாத நெருக்கடி தமிழகத்தின் வலுவான உற்பத்தி துறைக்கு முன்னிலையில் உள்ளது. பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.

எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் அவசரமாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் தொழில் துறையினருடன் கலந்துபேச வேண்டும். இந்த சூழ்நிலையை சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box