மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து: உயர் நீதிமன்ற உத்தரவு

தமிழகத்தில் செயல்படும் மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால், அவற்றின் உரிமையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட பல இடங்களில் செயல்படும் தனியார் மனமகிழ் மன்றங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக பல மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், வீராகதிரவன் ஆஜராகி, மதுவிலக்கு துறை ஆணையர் மற்றும் பதிவுத்துறை ஐஜி பதில் மனு சமர்ப்பித்தனர். பின்னர் நீதிபதிகள், பதிவுத்துறை சார்பில் “மனமகிழ் மன்றங்களை சங்க விதிகளின்படி பதிவு செய்தோம்; எங்கள் பணி முடிந்தது” என குறிப்பிட்டனர்.

நீதி மன்றம் கூறியது: “இதை ஏற்க முடியுமா? மதுவால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். பதிவுத்துறையின் நடவடிக்கை மனமகிழ் மன்றங்களை பாதுகாப்பதாக இருக்கக் கூடாது.”

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எஃப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான விற்பனை கூடங்கள் காளான்கள் போல் அதிகமாகியுள்ளன.

இந்த மனமகிழ் மன்றங்கள் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. பின்னர் மதுபானம் விற்க எஃப்எல்-2 உரிமம் பெறுகின்றனர். மனமகிழ் மன்றங்களில் சட்டப்படி விளையாட்டு செயல்பாடுகள் இருக்க வேண்டும். மதுபானம் அங்கு உறுப்பினர்களுக்கே விற்கப்பட வேண்டும். ஆனால் சில மன்றங்களில் விளையாட்டு நிகழ்வுகள் இல்லாமல், அங்கு உறுப்பினர் அல்லாத வெளியாட்களுக்கும் மது விற்பனை நடக்கிறது. பதிவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதில்லை.

இதனால், தமிழகத்தில் எஃப்எல்-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையம் போல் செயல்பட்டு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால், தமிழக அரசு மதுவிலக்கு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். உரிமத்தை ரத்து செய்யும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மனமகிழ் மன்றங்களை முறைப்படுத்த பதிவுத்துறை ஐஜி, மதுவிலக்கு ஆணையர், மாநகர் காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 2021ல் டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையில், அங்கு பதிவு மற்றும் உரிம நிபந்தனைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Facebook Comments Box