சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட கட்டிடத்தை மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா உட்பட அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.
அந்த நேரத்தில் அமைச்சர் கூறியதாவது: இந்த அரசு மருத்துவமனை 120 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. சைதாப்பேட்டை மட்டுமல்ல, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை, சோழிங்கநல்லூர், அக்கரை போன்ற பல இடங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். ரூ.28.70 கோடியில் 68,920 சதுரஅடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தரைத்தளம் மற்றும் 6 தளங்களைக் கொண்ட கட்டிடத்தில் பல்வேறு வசதிகள் இருக்கின்றன. ரோட்டரி சங்கத்தின் சார்பில் 14 டயாலிசிஸ் இயந்திரங்கள் மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெறுகிறார்கள். ஒருவருக்கு டயாலிசிஸ் செய்ய 4 மணி நேரம் ஆகும். தினமும் மூன்று பிரிவுகளில் இயந்திரங்கள் செயல்படுகின்றன. இதனை மேலும் விரிவாக்க ரோட்டரி சங்க நிர்வாகிகளிடம் 11 இயந்திரங்களை கேட்டுள்ளனர். கட்டிடம் திறக்கப்படும் போது மொத்தம் 25 டயாலிசிஸ் இயந்திரங்கள் செயல்பாட்டில் இருக்கும்.
மேலும், ரூ.1 கோடி செலவில் ரோட்டரி சங்கம் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரத்த வங்கியை மருத்துவமனையில் ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாத முதல் வாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதிய கட்டிடத்தை மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளார் என்று அமைச்சர் தெரிவித்தார்.