நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு கருணை இல்லை – உயர் நீதிமன்றம் தெளிவுரை
நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு எந்த விதமான கருணையும் காட்ட முடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அவற்றை மக்கள் நலனுக்காக பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தினர்.
மதுரை உள்ளிட்ட இடங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஜி. அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “நீர்நிலைகளில் எந்த வகையிலான ஆக்கிரமிப்பும் அனுமதிக்கப்படக் கூடாது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்கனவே பல உத்தரவுகள் வழங்கியுள்ளன. எனவே, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு கருணை காட்ட இயலாது. ஆனால், பல ஆண்டுகளாக அந்த இடங்களில் வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டு, இலவச பட்டா வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தனர்.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், “நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கான மாற்று இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றன. தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயல்முறையை நிறைவு செய்ய 6 மாதங்கள் தேவைப்படுகிறது” எனக் கூறினார்.
இதனையடுத்து நீதிபதிகள், “மாற்று இடம் ஒதுக்கப்பட்ட பின், நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். அதன் பின், மக்களின் நலனுக்காக நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என உத்தரவிட்டனர்.