எஸ்.ஐ தேர்வில் புதிய நடைமுறை அமல்: பொதுப் பிரிவு – காவலர் ஒதுக்கீடு ரத்து; அரசாணை வெளியீடு
எஸ்ஐ தேர்வில் இனி காவலர்களுக்கான தனிப்பட்ட இடஒதுக்கீடு கிடையாது. அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்துத் தேர்வும், உடற்திறன் தேர்வும் நடத்தப்படும் என்று தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 1,299 துணை ஆய்வாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மே 4-ஆம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உற்சாகமாக விண்ணப்பித்தனர். வழக்கமாக காவல் துறையில் 2-ஆம் நிலை, முதல் நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணிபுரிபவர்கள் கூடுதலாக துணை ஆய்வாளர் தேர்வில் பங்கேற்பார்கள். இவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. மீதமுள்ள 80% பொதுத் தேர்வாளர்களுக்கே வழங்கப்பட்டது.
காவலர்களுக்கு சட்டம் மற்றும் உளவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் ஏற்கெனவே உடற்திறன் சோதனையைத் தாண்டி பணியில் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு உடற்திறன் தேர்வு நடத்தப்படாது. ஆனால், பொதுப் பிரிவில் பங்கேற்பவர்களுக்கு கூடுதலாக உடற்திறன் சோதனை நடத்தப்பட்டு வந்தது. அவர்களுக்கு சட்டம் சார்ந்த கேள்விகள் இடம்பெறாது.
இதுவரை, பொதுப்பிரிவும் காவலர்களும் தனித்தனி தேர்விலும், தனித்தனி மதிப்பெண் கணக்கிலும் பங்கேற்றனர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் எஸ்ஐ பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். பயிற்சிக் காலத்தில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால், 20% ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் முதலில் பட்டியலில் வைக்கப்பட்டு, அதன் பின்னரே பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இடம் பெறுவார்கள்.
இதே நடைமுறையே இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சீனியாரிட்டி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பழைய முறையில் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, தமிழக அரசு நேற்று முன்தினம் புதிய அரசாணை வெளியிட்டது. அதில், டிஜிபியின் பரிந்துரையை மதித்து, சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 20% காவலர் ஒதுக்கீடும், 80% பொதுப்பிரிவு ஒதுக்கீடும் இல்லாமல், அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்ஐ தேர்வுக்கான புதிய ஒரே மாதிரியான தேர்வு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கல்வித் தகுதி, தமிழ் மொழித் தேர்வு, பொதுத்தேர்வு, பொது அறிவு தேர்வு, உடற்திறன் சோதனை (உயரம், மார்பு அளவு, ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், எடை எறிதல்) ஆகிய அனைத்திலும் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
இதனால், இனிமேல் எஸ்ஐ தேர்வு அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்து மற்றும் உடற்திறன் தேர்வாக இருக்கும். காவலர்களுக்கான 20% இடஒதுக்கீடு முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.