மேட்டூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம் – டெல்டா பாசனத்திற்கு நீர் குறைப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்ததால், 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டது. மேலும், காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

முன்தினம் இரவு விநாடிக்கு 19,850 கனஅடி அளவிலிருந்த நீர்வரத்து, நேற்று மாலை 10,850 கனஅடியாக சரிந்தது. இதையடுத்து, கடந்த ஆறு நாட்களாக திறந்திருந்த 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை 10 மணி முதல் நிறுத்தப்பட்டது.

டெல்டா பாசனத்துக்கு இதற்கு முன் நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 15,000 கனஅடி அளவில் வெளியேற்றப்பட்ட நீர், தற்போது 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 850 கனஅடி அளவில் நீர் திறந்து விடப்படுகிறது. கூடுதலாக, உபரிநீர் திட்டம் மூலம் ஏரிகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில், முன்தினம் காலை விநாடிக்கு 24,000 கனஅடி அளவில் இருந்த நீர்வரத்து, மாலை 18,000 கனஅடியாக குறைந்தது. நேற்று காலை 6 மணிக்கு 14,000 கனஅடியாகவும், மதியம் 2 மணிக்கு 9,500 கனஅடியாகவும் சரிந்தது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

Facebook Comments Box