‘மகிழ்ச்சி’ கருப்பொருளில் மாணவி தாரிகாவின் கலைக் கண்காட்சி – சென்னையில் ஆகஸ்ட் 30 முதல்
சென்னைச் சேர்ந்த மாணவி தாரிகா, மகிழ்ச்சி என்ற தலைப்பில் உருவாக்கிய 30 கலைப் படைப்புகளை ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் ஒரு வாரம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறார்.
வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராமின் மகளான தாரிகா (18), மகிழ்ச்சியை மையமாகக் கொண்டு சித்தரித்த படைப்புகளை சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கல்பா ட்ரூமா அரங்கில் காட்சிப்படுத்த உள்ளார்.
கண்காட்சி தொடக்க விழா ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும். இதில், தனது கலைக் கற்பனை திறனை, ஓவியங்கள் மட்டுமல்லாமல் சிற்பங்கள் மற்றும் திரைச்சீலைகளின் வழியாகவும் வெளிப்படுத்த உள்ளார்.
இதுகுறித்து தாரிகா கூறியதாவது:
“இந்த உலகில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். மகிழ்ச்சி என்பது உலகளாவிய உணர்வு என்பதால், அதையே என் கண்காட்சியின் கருப்பொருளாக எடுத்துள்ளேன். இந்த சுருக்கக் கலை (abstract art) மூலம், ஒரு காட்சியை நேரடியாக வரைவதற்குப் பதிலாக அதன் சாராம்சத்தை வெளிப்படுத்த முயன்றுள்ளேன்” என்றார்.
தாரிகாவின் கலை வழிகாட்டி டயானா சதீஷ் தெரிவித்ததாவது:
“இந்த படைப்புகளை தாரிகா இயற்கை நிறங்களைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளார். அவர் பயன்படுத்திய வண்ணத் தேர்வு, அமைப்பு மற்றும் வடிவமைப்பு அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.
சென்னையில் இதற்கு முன், திருக்குறளை மையமாகக் கொண்டு மூன்று கலைக் கண்காட்சிகள் மூலம் தாரிகா தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நவராத்திரி திருவிழாவின் போது, கடல், அமேசான் காடு, ஜப்பான், மனித மூளை, பணம், காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு கருப்பொருள்களைச் சுற்றியும் கலைப் படைப்புகளை உருவாக்கியுள்ளார்” என்றார்.