“இபிஎஸ் சுற்றுப்பயணத்தால் தாக்கமும் இல்லை, பயனும் இல்லை” – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

“தோல்வி அச்சத்தினால்தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அந்தப் பயணத்தால் எந்த எழுச்சியும் உருவாகவில்லை; மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணியின் இறுதி கட்டத்தை இன்று காலை அமைச்சர் சேகர்பாபுவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“இந்த குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 300 மாநகர பேருந்துகள், 600 எஸ்இடிசி பேருந்துகள், 50 கர்நாடக கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் மற்றும் 36 அண்டை மாநிலங்களின் பேருந்துகள் இயக்கப்படும்.

வார நாட்களில் சுமார் 30 ஆயிரம் பயணிகளும், விடுமுறை நாட்களில் 40 ஆயிரம் பயணிகளும், திருவிழா காலங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் பயன்படுத்துவார்கள். இந்த நிலையம் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.”

அதிமுக தலைவர் பழனிசாமி மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

“அந்தச் சுற்றுப்பயணம் தோல்வி அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. மக்களிடம் எந்த ஈர்ப்பையும் உருவாக்கவில்லை; எந்த பயனும் தரவில்லை. ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று கூறுவதற்குப் பதிலாக, ‘சம்பாதித்ததை காப்போம் – சம்மந்தியை மீட்போம்’ என்று சொல்லலாம்” என்றார்.

இந்த ஆய்வின்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Facebook Comments Box