மேட்டூர் அணையில் 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றம் நிறுத்தம்

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், மேட்டூர் அணை இந்தாண்டில் ஆறாவது முறையாக கடந்த 2-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பிற்காக அணைக்கு வந்த அளவு நீர், காவிரியில் விடப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 29,300 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 23,300 கனஅடியாகக் குறைந்தது. இதையடுத்து, தொடர்ந்து 2 நாட்கள் திறக்கப்பட்டிருந்த 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம், நேற்று காலை 8 மணி முதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அணையின் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 22,500 கனஅடியாகவும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடியாகவும் நீர் திறக்கப்படுகிறது.

நேற்று அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்தேக்கம் 93.47 டிஎம்சியாகவும் பதிவாகியது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், முன்தினம் விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி வந்த நீர்வரத்து, நேற்று 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

Facebook Comments Box