திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை சாத்தியம்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 10) கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தெற்கு ஒடிசா–வட ஆந்திரா கடலோரப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், மன்னார் வளைகுடா மற்றும் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் கீழடுக்கு சுழற்சிகள் உருவாகியுள்ளன. இதன் விளைவாக, தமிழகத்தின் பல இடங்களில் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
கோவை மலைப் பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல், நாளை (செப்டம்பர் 11) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை ஏற்படும் சாத்தியம் உள்ளது.
இதே நேரத்தில், தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை 35.6 முதல் 37.4 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.