இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் – காசி இலவச ஆன்மிகப் பயணம்
ராமேசுவரம் – காசி இலவச ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
அந்தத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இவ்வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதியில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் 30 பக்தர்கள் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க விரும்புவோர்:
- இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- இறைநம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும்.
- வயது 60 முதல் 70க்குள் இருக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தை தாண்டக்கூடாது.
- வட்டாட்சியரிடமிருந்து வருமானச் சான்றிதழும், உடல் நலத்துக்கான மருத்துவச் சான்றும், ஆதார் நகலும் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரடியாகவும் அல்லது www.hrce.tn.gov.in இணையதளத்திலிருந்தும் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான ஆவணங்களுடன், அதே அலுவலகத்தில் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு துறை இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது 1800 425 1757 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.