திமுக ஆட்சியில் 4 ஆண்டுகள் கடந்தும் கோரிக்கைகள் புறக்கணிப்பு: ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெற்றோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில சத்துணவு–அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

சங்க மாநில தலைவர் கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தைப் பற்றிச் சங்க மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

“2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக தனது அறிக்கையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசுப் பணியாளர் அந்தஸ்து அளித்து, காலமுறை ஊதியமும், குறைந்தபட்ச ஓய்வூதியமும் வழங்கப்படும் என்று உறுதியளித்தது. ஆனால், நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது எங்களுக்குக் கிடைப்பது ரூ.2,000 மட்டுமே ஓய்வூதியமாகும்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில்:

“2021-ல் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க மாநாட்டிலும், 2022-ல் நடந்த ஜாக்டோ-ஜியோ மாநாட்டிலும், தமிழக முதல்வர், நிதிநிலை மேம்பட்ட பிறகு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். ஆனால் அது வெறும் உரையிலேயே முடிந்து, இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

எனவே, 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கப்பட வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், பண்டிகை முன்பணம், மருத்துவ படி, மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி உள்ளிட்ட 10 அம்சங்களை நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Facebook Comments Box