டெட் தேர்வு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் – தமிழக அரசு தீர்மானம்

ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அனைத்து ஆசிரியர்களும் டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பால், தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்டது. அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருப்பதாவது:

“டெட் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஆசிரியர் பற்றாக்குறை உருவாகும். மேலும், டெட் தேர்வை பின்னோக்கிப் பயன்படுத்துவது, ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box