மருத்துவ முன்னேற்றத்துக்காக பொதுமக்கள் உடல் தானம் செய்ய முன்வர வேண்டும்: எம்.பி சச்சிதானந்தம்

மருத்துவ வளர்ச்சிக்கு பொதுமக்கள் தங்களுடைய உடலை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் தெரிவித்தார். மேலும், ஆர். சச்சிதானந்தம் மற்றும் அவரது மனைவி கவிதா உடல் உறுப்பு தான உறுதிமொழி பத்திரம் வழங்கி தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில் கட்சியின் தேசிய தலைவரான சீதாராம் யெச்சூரி நினைவு தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. அங்கு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, திண்டுக்கல் அருகே அடியனூத்தில் அமைந்த திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் தானம் மற்றும் கண் தானம் வழங்க உறுதிமொழி பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையிட்டார், நகர செயலாளர் அரபு முகமது வரவேற்றார் மற்றும் ஒன்றிய செயலாளர் சரத்குமார் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மொத்தம் 75 பேர் உடல் மற்றும் கண் தான உறுதிமொழி பத்திரங்களை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்களிடம் வழங்கினர். உறுதிமொழி பத்திரம் வழங்கிய அனைவரையும் திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது உடலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளித்தார். இதை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. உடல்களை தானம் செய்யும் போது சில சந்தேகங்கள் உருவாகலாம். குறிப்பாக, சில சமுதாயங்கள் உடல்களை புதைப்பார்கள்; சிலர் எரிக்கின்றனர். ஆனால் மருத்துவ வளர்ச்சிக்காக நமது உடல்களை தானமாக வழங்க அனைவருக்கும் விழிப்புணர்வு வேண்டும்.

வருங்காலத்தில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இத்தகைய செயல்களில் அதிக அளவில் பங்கேற்பார்கள். அதேபோல், பொதுமக்களும் மருத்துவ முன்னேற்றத்திற்கு தங்களுடைய உடல்களை தானமாக வழங்க முன்வர வேண்டும்” என்று எம்.பி சச்சிதானந்தம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம், அவரது மனைவி கவிதாவுடன் உடல் தான உறுதிமொழி பத்திரம் வழங்கினர். அதேபோல், பலர் தம்பதிகளாக வந்து தங்களுடைய உறுதிமொழி பத்திரங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி, துணை முதல்வர் கீதா ராணி மற்றும் உடற்கூறாய்வியல் துறை மருத்துவர் ஜெயமணி உடல் தான உறுதிமொழி பத்திரங்களை பெற்றனர். உடல் மற்றும் கண் தானம் செய்யும் போது எழுகிற சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

Facebook Comments Box