விஜய் திருச்சியில் இன்று பிரசாரம்: அண்ணா, எம்ஜிஆர் படத்துடன் பேருந்து
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது மக்கள்சந்திப்பு பயணத்தை ஆரம்பிக்கிறார். அதன் பின்னர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பொதுமக்களைச் சந்திக்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்திற்கான சின்னம் தவெக சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், அண்ணா, எம்ஜிஆர் படங்களுடன் நடுவில் விஜய்யின் படம் இடம்பெற்றுள்ள பிரசார பேருந்தும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த பேருந்து, நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
தொண்டர்களுக்கு விஜய் கடிதம்:
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘வாகை சூடும் வரலாறு மீண்டும் பிறக்கிறது: உங்க விஜய் நா வரேன்’’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘‘இது தமிழகம் முழுவதையும் சுற்றும் மக்கள்சந்திப்பு பயணம். 13ம் தேதி (இன்று) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை அருகிலுள்ள எம்ஜிஆர் சிலை பகுதியில் தொடங்குகிறேன். அண்ணாவின் ‘மக்களிடம் செல்’ என்ற ஆணையை மனதில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று சந்திக்கிறேன்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரசாரத்திற்காக விஜய், சென்னையிலிருந்து தனியார் விமானத்தில் புறப்பட்டு, காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை அடைகிறார். அதன்பின் காலை 10.35 மணிக்கு எம்ஜிஆர் சிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பிறகு அரியலூரில் பழைய பேருந்து நிலையம் அருகே மக்களிடம் பேசுகிறார்.
தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட குன்னம் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணியளவில், பின்னர் பெரம்பலூர் வானொலி திடலில் மாலை 6 மணியளவில் பிரசாரம் செய்கிறார். அதன் பின்னர் சாலையில் வழியாக சென்னைக்கு திரும்புகிறார்.