ஐ.டி. துறையில் உலகளவில் தமிழர்களின் பங்கும் உயர்வு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாவது: உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழர்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சர்வதேச தமிழ் பொறியாளர்கள் சங்கத்தின் முதலாவது மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் துவக்க விழாவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தனர்.

இதில் மூத்த விஞ்ஞானி ஏ.சிவதாணுப் பிள்ளை, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையில், “தமிழர்களின் வாழ்வில் பொறியியல் நுணுக்கம் ஆழமாக பதிந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கட்டிய துறைமுகங்கள் இதற்கு சான்று. உலக வர்த்தக மையங்களுடன் தமிழர்கள் தொன்மையான காலத்திலிருந்து உறவாடி வந்துள்ளனர். இதற்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்கள் சாட்சியம். அதேபோல, பெரிய அணைகள், சிறப்பான கோயில்கள் அனைத்தையும் தமிழக பொறியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டியுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மழைநீர் வடிகால் அமைப்பு பொறியியல் திறமையின் சிறந்த உதாரணமாகும். தமிழகம் கல்வியை ஊக்குவிக்கும் நலத்திட்டங்கள் – சத்துணவு, இலவச சைக்கிள், மடிக்கணினி – ஆகியவற்றால் இன்று பொறியியல் துறையில் முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தின் பல்கலைக்கழக சேர்க்கை விகிதம் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. மாநில மக்கள்தொகை வெறும் 6 சதவீதம் தான், ஆனால் இந்திய பொறியியல் பட்டதாரிகளில் 20 சதவீதம் தமிழகம் சார்ந்தவர்களே. ஐ.டி. சேவைகளிலும் தமிழகத்தின் பங்களிப்பு உலகளவில் மிகப்பெரியது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழர்களின் சாதனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது” என்றார்.

Facebook Comments Box