இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக வீரபாண்டியன் போட்டியின்றி தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த கட்சியின் நடைமுறைப்படி, மாநிலச் செயலாளர் ஒவ்வொரு 3 ஆண்டிற்கும் ஒருமுறை தேர்வு செய்யப்படுவார். 2015-ல் இரா.முத்தரசன் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் தொடர்ச்சியாக 2 முறையும் அவரே தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 9 ஆண்டுகள் பணியாற்றினார்.
இந்த நிலையில், புதிய மாநிலச் செயலாளரை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தற்போதைய மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மு.வீரபாண்டியன் மாநிலச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 31 மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் 3 நிரந்தர அழைப்பாளர்கள், மொத்தம் 34 பேர் ஒருமனதாக அவரை தேர்வு செய்தனர்.
அவருக்கு பல தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் கூறியது: “மு.வீரபாண்டியனுக்கு மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். கட்சியை சிறப்பாக வழிநடத்திய முத்தரசன் தோழருக்கு நன்றி. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக இடதுசாரி அரசியலில் இணைந்து செயல்பட்டு வெற்றி காண்போம்.”
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வீரபாண்டியன் 2018 முதல் இந்திய கம்யூனிஸ்ட் துணை அமைப்பான தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். அவர் கூறியதாவது: “எங்கள் கட்சிக்கு செல்வாக்கு அதிகரிக்கிறது. எதிர்கால காலச்சூழலை கருத்தில் கொண்டு நாங்களும் முன்னேறுவோம்.”