அண்ணாவின் 117வது பிறந்த நாள்: இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் மரியாதை
அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
“பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளான இன்று காலை (15.9.2025 – திங்கட்கிழமை), சென்னை அண்ணாசாலையில் உள்ள திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்ட திருஉருவப் படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.”
மேலும், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.