16-வது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி வழங்க வேண்டும் – அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்
டெல்லியில், மத்திய மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் தலைமையில் மாநில மின்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேசியதாவது:
“தமிழக எரிசக்தித் துறை பல முக்கிய சாதனைகள் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில், மின் உற்பத்தி, தொடர் அமைப்பு மற்றும் பகிர்மானத்திற்காக ரூ.2 லட்சம் கோடிக்கு மேற்பட்ட முதலீடு தேவைப்படுகிறது. இதற்காக மத்திய–மாநில அரசுகள் இணைந்து செயல்படும் புதிய விரிவான கடன் மறுசீரமைப்பு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். மேலும், 16-வது நிதிக் குழுவின் கீழ் தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும்,” என்றார்.
அத்துடன், சூரிய மேற்கூரை மின்சக்திக்கான நெட் மீட்டரிங் முறையை நெட் ஃபீட்-இன் முறையாக மாற்ற வேண்டும், மின்சாரக் கட்டணக் கடன்களுக்கு ஐபிசி தீர்வு முறையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், ரிசர்வ் வங்கி கடன் காலத்தை சொத்து ஆயுளுடன் பொருந்துமாறு நீட்டிக்க அனுமதி அளிக்க வேண்டும், வெளிநாட்டு கடன் வரம்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.