திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்து
திருமண மண்டபம் கட்டுவதற்கு பக்தர்கள் காணிக்கை அளிப்பதில்லை; கோயில் நிதியில் திருமண மண்டபங்களை கட்டுவதற்குப் பதிலாக கல்வி நிலையங்களையும் மருத்துவமனைகளையும் அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில், “பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியிலிருந்து ரூ.4.54 கோடி செலவில் உத்தமபாளையத்தில் திருமண மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது அறநிலையத்துறை விதிகளுக்கு எதிரானது. கோயில் நிதி திருமண மண்டபங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்கப்பெருமாள் கோயிலில் ரூ.400 கோடி நிதி உள்ள நிலையில், பழநி கோயில் நிதியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது.
அப்போது நீதிபதிகள், “பக்தர்கள் அளிக்கும் காணிக்கை திருமண மண்டபங்களை கட்டுவதற்காக அல்ல. அந்த மண்டபங்களில் ஆபாச பாடல்கள் ஒலிக்க கோயில் நிலம் பயன்படுத்தப்பட வேண்டுமா?” என்ற கேள்வி எழுப்பினர்.
மேலும், திருமண மண்டபங்களுக்கு பதிலாக பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்ற பொதுப் பயன்பாட்டு நிலையங்களை கட்டலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 19-க்கு தள்ளி வைக்கப்பட்டது.