தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செப். 18) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்னிந்தியப் பிராந்தியத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, மேலும் தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால், இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். நாளை சில இடங்களில், மேலும் செப்டம்பர் 20 முதல் 22 வரை வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 21 மாவட்டங்கள், அத்துடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box