வானிலை முன்னறிவிப்பு: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை (செப்.19) திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுவதால், 19ம் தேதி சில இடங்களில், 20ம் தேதி வடதமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 21ம் தேதி தமிழகத்தில் பல இடங்களில், 22 முதல் 24ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் செப்.19 முதல் 22 வரை மணிக்கு 35-45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய (செப்.18) காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 8 செ.மீ., திருப்பூர், திருப்பத்தூர் (ஆலங்காயம்), கோவை (சின்னக்கல்லாறு) ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் 5-6 செ.மீ. வரை மழை பெய்தது.