ராஜபாளையம் அருகே பேருந்து விபத்து: 8 பேர் காயம்; மதுரை – கொல்லம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ராஜபாளையம் அருகே அரசுப் பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் அரசுப் பேருந்து மிகவும் சேதமடைந்தது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மகளிர் கட்டணமில்லா பேருந்து சனிக்கிழமை காலை மம்சாபுரம் நோக்கி புறப்பட்டது. ஓட்டுநர் ராஜேந்திரன் பேருந்தை இயக்கினார். பேருந்தில் நடத்துநர் சோலைராஜனும் 7 பெண் பயணிகளும் இருந்தனர்.
மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் காயல்குடி ஆறு அருகே சென்ற போது, ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த தனியார் கல்லூரி பேருந்து அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இதில் அரசுப் பேருந்தின் வலது புறம் முழுவதும் சேதமடைந்து எலும்பு கூடாக மாறியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மில் தொழிலாளர்கள் ஸ்வேதா (21), பிருந்தா (25), செல்வி (40), சீதாலட்சுமி (50), சீனியம்மாள் (40), ராமுத்தாய் (43), அரசு மருத்துவமனை செவிலியர் ஹசன் பானு (42) ஆகியோர் காயமடைந்தனர். கல்லூரி பேருந்தை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சேகர் (55) என்பவரும் காயமடைந்தார்.
போலீஸார் காயமடைந்த 8 பேரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.