வடசென்னை மெரிடியன் மருத்துவமனையில் இதய அறிவியல் மையம் திறப்பு
வடசென்னை மாதவரத்தில் அமைந்துள்ள மெரிடியன் மருத்துவமனையில் இதய அறிவியல் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
மாதவரம் 200 அடி ரிங் ரோடு, ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ள மெரிடியன் மருத்துவமனையில், மெரிடியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்டியாக் சயின்ஸ் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில், 16,000-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இதய அறிவியல் மையத்தின் இயக்குநர் மருத்துவர் மூசா குன்ஹி, சர்வதேச பயிற்சி மற்றும் அனுபவமுள்ள புகழ்பெற்ற இதய நிபுணர் மருத்துவர் அஸ்வனி லதா, வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன், பீஷ்ம ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வடசென்னையில் 300 படுக்கைகளுடன் உள்ள இந்த மருத்துவமனையில், முழுமையான முதல் இதய சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையம் இது. உலகத் தரமான உயர் தர சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. வடசென்னையில் முழுமையான மருத்துவ பராமரிப்பு வசதிகளை வழங்குவதில் மெரிடியன் மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது. மேலும், புற்றுநோய் சிகிச்சைக்காக கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையை நிறுவிய முதல் மருத்துவமனையும் இதுவாகும்.
இதய சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு புற்றுநோயியல், இரைப்பை-குடல், நரம்பியல், எலும்பியல், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், மகளிர் மருத்துவம் என முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் வடசென்னையின் ஒரே மருத்துவமனை மெரிடியன் மருத்துவமனை ஆகும்.
உலகத் தரத்தில் 24/7 இயங்கும் இதய கேத் லேப் ஆய்வகம் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதய சிகிச்சைகளுக்காக சர்வதேச பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி, கரோனரி ஆஞ்சியோகிராபி, அதெரெக்டமி, பேஸ்மேக்கர் இம்பிளான்டேஷன், எலக்ட்ரோ பிசியாலஜி நடைமுறைகள் போன்ற வசதிகள் இங்கு உள்ளன.