சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 4,000 மது பாட்டில்கள், ரூ.28 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் அழிப்பு

சென்னை மாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் 4,000 மது பாட்டில்கள் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

சென்னையில், தமிழக அரசு தடை செய்த குட்கா போன்ற புகையிலை பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, சென்னை மாநகர காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டு, கள ஆய்வின் மூலம் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் ஹான்ஸ், கூல் லிப், குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களும், மதுபாட்டில்களும் நீதிமன்ற அனுமதியுடன் அழிக்கப்பட்டன.

அதன்படி, சென்னையில் சேகரிக்கப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிமுறைகளை பின்பற்றி நேற்று (செப் 20) அழிக்கப்பட்டது.

அதேபோல், நீதிமன்ற உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட காவல்துறையினர் முன்னிலையில் ரூ.5.25 லட்சம் மதிப்பிலான 4,000 மதுபாட்டில்களும் முறையாக அழிக்கப்பட்டன.

Facebook Comments Box