தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்குமே போட்டியென விஜய் அறியாமல் பேசுகிறார் – ஆர்பி. உதயகுமார்
தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்குமே போட்டியென விஜய் அறியாமல் பேசுகிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
மகாளய அமாவாசையையொட்டி மதுரை தெப்பக்குளத்திலுள்ள முத்தீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் குடும்பத்தினருடன் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதன்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தின் உண்மை நிலவரத்தை திமுக அரசு மறைக்கிறது. பங்காளி சண்டை, பகையாளியை தடுப்பதற்காகத் திமுக உள்ளதா? தமிழக மக்களின் முதுகெலும்பை உடைத்து, தலை குனியவிட மாட்டேன் என நான் சொல்கிறேன்.
மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்திற்கு ஒரு சல்லி காசையும் திமுக பெற்றுத் தரவில்லை. திமுகவுக்கு தேவை என்றால் பிரதமருக்கு வெண்குடை பிடிப்பதும், தேவையில்லை என்றால் கருப்பு பலூன் பறக்க விடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
மத்திய அரசுடன் இணைந்து, தமிழகத்துக்கு திமுக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஜனநாயக நாட்டில் யாரும் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்களிடம் ஆதரவை கேட்கலாம். தமிழக அரசியலில் உள்ள பல கட்சிகளுக்கும் தியாக வரலாறு உள்ளது. அதிமுக அந்த வரலாற்றை கொண்டு தேர்தல் களத்தில் செயல்படுகிறது. அதனால் அதிமுகவிற்கு நிரந்தர வாக்கு வங்கி உள்ளது. விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாக விடுவேன் எனக் கூறுகிறார்.
அவர் பரீட்சை எழுதட்டும். பாஸ் ஆவாரா, இல்லையா என பார்ப்போம். அரசியல் களத்தில் தற்போது விஜய் படித்து கொண்டிருக்கிறார். திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென அவர் அறியாமல் பேசுகிறார். தமிழக அரசியல் களத்தில் திமுகக்கு மாற்று அதிமுக, அதிமுகக்கு மாற்று திமுக என்பது வரலாறு.
அதிமுக மட்டுமே திமுகவை வீழ்த்தும் சக்தியாக உள்ளது. எம்ஜிஆரை பேசாமல் யாரும் பொது வாழ்க்கையை தொடர முடியாது. அதிமுக-பாஜக கூட்டணியில் டெல்லியில் எடுக்க வேண்டிய முடிவுகளை அமித்ஷா எடுப்பார்; தமிழகத்தில் எடுக்க வேண்டிய முடிவுகளை பொதுச்செயலாளர் பழனிசாமி எடுப்பார்.
அமித்ஷாவுடன் பேசியது பொதுச்செயலாளர் பழனிசாமிக்கும், ஆண்டவனுக்குமே தெரியும். முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கடை திறப்பு விழாவில் கூட்டம் கூடுகிறது; எல்லா நேரத்திலும் தலைமையாசிரியர் பதில் சொல்ல முடியாது. திமுகவை எதிர்ப்பதில் தலைமையாசிரியர் பழனிசாமி உறுதியாக உள்ளார் என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.