“ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” – சு. வெங்கடேசன் கேள்வி
“ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு போய்ச் சேருமா? அதற்கு என்ன உத்தரவாதம்? கார்ப்பரேட் வரிகளை உயர்த்தி மாநில அரசுகளுக்கு இழப்பீடு தருவீர்களா?” என மதுரை மக்களவை எம்.பி. சு. வெங்கடேசன் பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
“நவராத்திரி தொடங்கும் நாளில் ஜிஎஸ்டி சலுகை அமலாகிறது என மகிழ்ச்சியை பகிர்ந்தீர்களே. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரிக் கொடுமையால் மக்களின் தூக்கத்தை கெடுத்து ‘சிவராத்திரி’ ஆக்கியதற்கு யார் பொறுப்பு?
ஊடகங்களை சந்திக்க மறுக்கும் பிரதமர் வழக்கம்போல தொலைக்காட்சியில் ஒருவழி உரை ஆற்றியுள்ளார். ஜிஎஸ்டி குறைப்பால் பெண்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் பலன் அடைவார்கள், ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சி அடையும் என கூறியுள்ளார்.
இருக்கட்டும். ஆனால், இத்தனை ஆண்டுகளாக யார் விவசாயிகளை, பெண்களை, நடுத்தர வர்க்கத்தை வறுத்தெடுத்தது? யார் குடும்பங்களின் மகிழ்ச்சியை குலைத்தது? நவராத்திரி நாளில் சலுகை வழங்கப்படுகிறதாம். ஆனால் 8 ஆண்டுகளாக நீங்கள் மக்களை வாட்டி, அவர்களின் தூக்கத்தை பறித்து எத்தனை இரவுகளை ‘சிவராத்திரிகள்’ ஆக்கினீர்கள். அதற்கெல்லாம் மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?
இப்போது வசூலிக்கப்படும் மொத்த ஜிஎஸ்டியில் நீங்கள் அளித்துள்ள சலுகை எத்தனை சதவீதம்? பல ஆண்டுகள் மக்களிடம் கொள்ளையடித்து, இப்போது தரும் அற்ப சலுகைக்காக இவ்வளவு ஆரவாரமா?
இந்த சலுகை உண்மையில் மக்களிடம் சென்று சேருமா? அதற்கென்ன உத்தரவாதம்? உங்களது கார்ப்பரேட் நண்பர்கள் அதை விடுவார்களா? உங்களிடம் கார்ப்பரேட் வரி விதிக்கும் அதிகாரம் இருக்கிறது. கார்ப்பரேட் வரிகளை உயர்த்தி மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்குவீர்களா? மாநிலங்கள் நடைமுறைப்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி பாதிப்பு ஏற்படாமல் செய்வீர்களா?” என்று சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும். இதன் மூலம் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். அவர்கள் விரும்பியதை வாங்க முடியும். ஜிஎஸ்டி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும்.” என தெரிவித்திருந்தார்.