திருச்சியில் புதை சாக்கடை விபத்து: விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் பலி

திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றச் சென்ற 2 துப்புரவுத் தொழிலாளர்கள், விஷவாயு தாக்குதலால் உயிரிழந்தனர்.

திருவெறும்பூர், பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அங்கு சில இடங்களில் சாக்கடை குழாய்கள் அடைப்பு ஏற்பட்டது. இதனால், அடைப்பை அகற்ற மாநகராட்சிக்காக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த துப்புரவுத் தொழிலாளர்கள் – கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சின்னசேலம் பிரபு (32) மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருவப்பூர் ரவி (38) – சாக்கடைக்குள் இறங்கினர்.

அப்போதே உள்ளே தேங்கியிருந்த விஷவாயு தாக்கியதால், இருவரும் மயங்கி விழுந்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, விஷவாயுவை வெளியேற்றி, அவர்களை மீட்டனர். ஆனால், இருவரும் அப்போது உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், இருவரின் உடல்களும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள், “பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடைக்குள் இறங்கியதால் தான் விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டது” என்று தெரிவித்தனர்.

Facebook Comments Box