“திமுகவுக்கு இன்று தகுதியான எதிரிகள் இல்லை!” – உதயநிதி ஸ்டாலின்

“10 யானைகள் சேர்ந்தாலும் திமுக என்ற ஆலமரத்தை சாய்க்க முடியாது. நேரு, ராஜாஜியை வென்ற திமுகவுக்கு இன்று தகுதியான எதிரிகள் இல்லை” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு கிருஷ்ணன் கோவில் அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

“ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதற்கு தொண்டர்களின் பங்களிப்பே காரணம். பல தடைகளை தாண்டியும் 75 ஆண்டுகளை நிறைவு செய்தும் இளமையுடன் உள்ள கட்சி திமுக.

10 யானைகள் சேர்ந்தாலும் திமுக என்ற ஆலமரத்தை சாய்க்க முடியாது. நேரு, ராஜாஜியை வென்ற திமுகவுக்கு இன்று எதிரில் எடப்பாடி, நயினார் நாகேந்திரன் மட்டுமே உள்ளனர். நம்மை எதிர்க்க தகுதியான எதிரிகள் தமிழ்நாட்டில் இல்லை. இன்று பலர் பேருந்து யாத்திரை நடத்தினாலும், 780 கோடி முறை பயணம் செய்த விடியல் பேருந்துதான் தமிழகத்தில் வெற்றி பெறும்.

மகளிர் உரிமை தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குறை எழுந்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அடுத்த இரு மாதங்களில் விடுபட்டவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும்.

தமிழகத்தை எட்டிப் பார்க்க முடியாத ஏமாற்றத்தில் சங்கிகளும், அவர்களின் அடிமைகளும் புதுப் பிரச்சினைகளை கிளப்புகிறார்கள். ஜெயலலிதா மறைந்த பின் பழனிச்சாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டன. மத்திய அரசு நிதி வழங்க மறுக்கும் நிலையில், இந்தி திணிப்பு காரணமாக புதிய கல்வி கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகிறோம்.

பாஜக அதிமுகவை கொத்து பரோட்டா போல் இணைத்துவிட்டது. பாஜக பல மாநிலங்களில் தில்லுமுல்லு செய்து ஆட்சி பிடித்துள்ளது; அதையே தமிழ்நாட்டிலும் செய்ய முயலும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கடந்த தேர்தலில் தோல்வியடைந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் மேலும் பல திட்டங்கள் கிடைக்கும் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். உண்மையை விட பொய்யும், வதந்தியும் வேகமாகப் பரவுகின்றன. எனவே நமது அரசின் சாதனைகளை தொடர்ந்து மக்களிடம் சொல்ல வேண்டும்.

மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் குறைகளை கேட்டாலே ஆதரவைப் பெறலாம். அந்த ஆதரவை வாக்குகளாக மாற்ற வேண்டும். 234 தொகுதிகளிலும் கருணாநிதி தான் வேட்பாளர் என நினைத்து செயல்படுங்கள். தமிழகம் எப்போதும் பாசிச சக்திகளுக்கு எதிரானது என்பதை 2026 தேர்தலில் நிரூபிக்க வேண்டும்.”

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

Facebook Comments Box