மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மறைந்த ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரனின் ரூ.2.56 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகள் வகித்த தியானேஸ்வரன், 1996-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் (டாமின்) தலைவராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தன் பெயரிலும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி, 1991 முதல் 1996 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.34 கோடி மதிப்பிலான சொத்துகள் குவித்தது கண்டறியப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டு, 2017-ல் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
தியானேஸ்வரன் பதவியில் இருந்த காலத்தில் ஷில்பி கிரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நமச்சிவாயம் அறக்கட்டளை பெயரில் அசையும், அசையா சொத்துகள் வாங்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே தியானேஸ்வரன் காலமானார்.
பின்னர், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தியானேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1.19 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தியானேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.1.7 கோடி மதிப்பிலான 16 அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.86.24 லட்சம் பணம் என மொத்தம் ரூ.2.56 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியதாக அறிவித்துள்ளது.