மின் மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு: சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய மனு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்
மின் வாரியத்தில் மின்மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரிய மனுவின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தது:
2021, 2022, 2023-ம் ஆண்டுகளில் தமிழக மின் வாரியத்துக்கு மின்மாற்றிகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான டெண்டரில் பங்கேற்றவர்கள் அனைவரும் முன்கூட்டியே முடிவு செய்து ஒரே தொகையை குறிப்பிட்டுள்ளனர். அதிகாரிகள் அனைவரும் இணைந்து டெண்டரில் பங்கேற்றவர்களுக்கு சமமாக பணிகளைப் பிரித்துக் கொடுத்துள்ளனர்.
இந்த டெண்டர் படி வெவ்வேறு திறன் கொண்ட 26,300 மின்மாற்றிகள் ரூ.1,068 கோடிக்கு வாங்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் அதிகாரிகளின் தவறால் சுமார் ரூ.350 கோடி அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
மின்மாற்றி கொள்முதல் செய்வதில் சாதாரண நிலை அதிகாரிகளால் முடிவு செய்ய முடியாது. மின்வாரிய உயர் அதிகாரிகளும், அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும் இணைந்து முடிவு செய்துள்ளனர். எனவே, இந்த முறைகேடு தொடர்பாக மின்வாரியத் தலைவர், டெண்டர் கோரும் அதிகார அமைப்பு, டெண்டர் உறுதி செய்யும் குழு, அப்போதைய மின்துறை அமைச்சர் ஆகியோரிடம் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “இதுபோன்ற வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் விசாரணையில் உள்ளன. எனவே, இந்த வழக்கையும் சென்னைக்கு மாற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.