சென்னை | 8 இடங்களில் மின் திருட்டு: ரூ.9.40 லட்சம் வசூல்
சென்னை கோட்டத்தில் 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, மின் நுகர்வோரிடமிருந்து ரூ.9.40 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க அதிகாரிகள் சென்னை வடக்கு, சென்னை மையம், சென்னை தெற்கு, சென்னை மேற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகள் மற்றும் சோழிங்கநல்லூர் கோட்டம் (சென்னை தெற்கு-2) ஆகிய இடங்களில் கடந்த 9-ம் தேதி ஆய்வு நடத்தினர்.
அப்போது 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, மின் நுகர்வோருக்கு ரூ.9.01 லட்சம் இழப்பீட்டு தொகை விதிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்கள் குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க ரூ.39 ஆயிரம் சமரசத் தொகை செலுத்தியதால், காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை சென்னை அமலாக்க செயற்பொறியாளரிடம் 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.