எண்ணூர் கட்டுமான விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு

எண்ணூரில் நடைபெற்று வந்த அனல் மின் நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-வும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“தமிழ்நாட்டின் சென்னையில் கட்டுமானப் பகுதி இடிந்து விழுந்த விபத்தை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்,” என்று கூறப்பட்டுள்ளது.

விபத்து விவரம்:

திருவள்ளூர் மாவட்டம் வாயலூரில், 2×660 மெகாவாட் திறனுடன் உருவாகி வரும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையக் கட்டுமானம் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. பாரதமிகு நிறுவனம் சார்பில் நடைபெறும் இப்பணியில் 3,000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 70% வேலைகள் முடிவடைந்துள்ளன என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில், இன்று மாலை நிலையத்தின் முகப்பு அமைக்கும் பணியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென இரும்புக் கட்டமைப்புகள் சரிந்து விழுந்தன. இதில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 4 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

Facebook Comments Box