கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் – 15 நாள் நீதிமன்றக் காவல்
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் இருவரையும், 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக, கரூர் நகர போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தலைமறைவாக இருந்த மதியழகன் மற்றும் அவருக்கு தங்குமிடம் வழங்கிய கட்சி நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை, திண்டுக்கல் மாவட்ட குஜிலியம்பாறையில் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, “உங்கள் தலைவரை முதல்வர் அல்லது அரசியல் தலைவர்களைப்போல எண்ணினீர்களா? அவர் ஒரு பிரபல முகம். அவரை காண அதிக மக்கள் வருவார்கள் என்பதைக் கணிக்க தவறிவிட்டீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், போலீசார் ஒருமையில் பேசுவதாக குற்றம்சாட்டிய தவெகவினருக்கு ஆதரவாக, “அவர்களை அடிக்கவும், ஒருமையில் விசாரிக்கவும் கூடாது” என போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
பின்னர், இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.