‘விஜய் ஒரு ஸ்டார்…’ – கரூர் நீதிமன்ற விவாதம் என்ன?

“முதல்வர், மற்ற தலைவர்களைப்போல் நினைத்தீர்களா? விஜய் ஒரு ஸ்டார். அவரைக் காண ஏராளமானோர் வருவார்கள். இதை கணிக்க தவறிவிட்டீர்களா?” என்று தவெக தரப்புக்கு கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ல் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோருக்கு எதிராக கரூர் நகர போலீஸ் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் தலைமறைவாக இருந்த மாவட்டச் செயலாளர் மதியழகன், அவருக்கு ஆதரவாக இருந்த கட்சி நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர்.

நீதிபதி இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்ற விவாத விவரம்:

நீதிபதி பரத்குமார்: “விஜய் பரப்புரையை காண 10 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என கணித்தீர்கள். நீங்கள் உங்கள் தலைவரை முதல்வர், மற்ற தலைவர்களைப்போல நினைத்தீர்களா? அவர் ஒரு ஸ்டார். அவரைக் காண ஏராளமானோர் வருவார்கள். இதை கணிக்க தவறிவிட்டீர்களா?”

கரூர் டிஎஸ்பி செல்வராஜ்: “பிற்பகல் 3 மணிக்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்படாது.”

நீதிபதி (தவெகவினரிடம்): “நிர்வாகிகள் யாரும் உங்கள் தலைவருக்கு தகவல் சொல்லவில்லை? கூட்டம் அளவை மீறி சென்றது தெரிந்தபோதும் நிர்வாகிகள் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை?”

தவெக: “கூட்ட நெரிசலுக்கு பின்னால் அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரை யாரையும் கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட வேண்டும். விஜய் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தது தானாக. யாரையும் அழைக்கவில்லை.”

நீதிபதி: “அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு சொல்லப்பட்டதா? அவரவர் உயிரை காப்பாற்ற அவர்கள் ஓடுகிறார்கள். தவறு யாருக்கு?”

டிஎஸ்பி செல்வராஜ்: “பிரச்சார வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்தவுடன் போதும் என்றேன். ஆனால் ஆதவ் அர்ஜுனாதான் முன்னே செல்வோம் என்றார். முனியப்பன் கோயில் பகுதியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தார். அப்போது விஜய் கேரவன் உள்ளே சென்றார். அங்கேயே இருந்தால் கூட்டம் கலைந்திருக்கும். விஜயின் வாகனம் உள்ளே சென்றபோது நெரிசல் ஏற்பட்டது.”

நீதிபதி: “விஜயைக் காண குழந்தைகள் வருவார்கள். அதற்கு ஏற்ற இடம் கேட்டிருக்க வேண்டும். நீங்கள் கேட்ட 3 இடமும் கூட்டத்திற்கு போதுமானவை அல்ல. எதிர்க்கட்சி தலைவரை பார்க்க வந்தவர்கள் அவர்களது கட்சியினர். ஆனால் விஜயைக் காண அனைவரும் வருவார்கள். காலாண்டு விடுமுறை, வார விடுமுறை உள்ள நிலையில் ஏன் இவ்வளவு கூட்டம் வரும் என எதிர்பார்க்கவில்லை”

அப்போது, போலீஸார் ஒருமையில் பேசுவதாக நீதிபதியிடம் முறையிட்டனர். நீதிபதி “அவர்களை அடிக்கவோ, ஒருமையில் பேசவோ கூடாது” என அறிவுறுத்தி, இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Facebook Comments Box